10.ஆம் வகுப்பு தமிழ் பாடலைப்படித்து விடையளித்தல் பயிற்சிகள்

 

10.ஆம் வகுப்புதமிழ்

பாடலைப்படித்து விடையளித்தல் பயிற்சிகள்


பாடலைப் படித்து வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடையளிக்க.

1.

"உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூளச்

 செந்தா மரைத்தேனைக் குடித்துச் சிறகார்ந்த

அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி

முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே!"  

1. பாடலின் ஆசிரியர்-

அ) பாரதியார் ஆ) பாவலரேறு பெருஞ்சித்திரனார் இ) பாரதிதாசன் ஈ) தமிழழகனார்

2. பண்புத்தொகையைத் தேர்ந்தெடுக்க.

அ) செந்தாமரை  ஆ) வீசுதென்றல்  இ) உணர்வெழுப்ப  ஈ) சிறகார்ந்த

3. தும்பி என்னும் சொல்லுக்கான பொருளைத் தேர்க.

அ) கனல்  ஆ) உந்தி  இ) யாண்டும்   ஈ) வண்டு

4. பாடல் இடம்பெற்றுள்ள நூல் -

அ) உலகியல் நூறு  ஆ) பாவியக் கொத்து  இ) கனிச்சாறு  ஈ) எண்சுவை

2.

"முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்

மெத்த வணிகலமும் மேவலால் - நித்தம்

அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு

இணைகிடந்த தேதமிழ் ஈண்டு."

5. பாடல் இடம்பெற்ற நூல் -

அ) நற்றிணை ஆ) முல்லைப்பாட்டு  இ) குறுந்தொகை ஈ) தனிப்பாடல் திரட்டு

6. பாடலில் இடம்பெற்றுள்ள அணி

அ) இரட்டுற மொழிதல் அணி ஆ) தீவக அணி  இ) வஞ்சப் புகழ்ச்சி அணி  ஈ) நிரல் நிறை அணி

7. தமிழுக்கு இணையாகப் பாடலில் ஒத்திருப்பது

அ) சங்கப் பலகை  ஆ) கடல்  இ) அணிகலன்  ஈ) புலவர்கள்

8. பாடலின் ஆசிரியர்

அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆ) நப்பூதனார் இ) சந்தக்கவிமணி தமிழழகனார் ஈ) பெருங்கௌசிகனார்

3.

"எமது உயிர் - நெருப்பை நீடித்துநின்று நல்லொளி தருமாறு

நன்றாக வீசு.

சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே.

பேய்போல வீசி அதனை மடித்துவிடாதே.

மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம்

நின்று வீசிக் கொண்டிரு.

உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்.

உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்.

உன்னை வழிபடுகின்றோம்."

9. பாடலை இயற்றியவர் -

அ) பாரதிதாசன் ஆ) பாரதியார்   இ) வைரமுத்து ஈ) சுரதா

10. லயத்துடன் பொருளைத் தேர்க.

அ) சீராக ஆ) வேகமாக இ) அழுத்தமாக ஈ) மெதுவாக

11. மோனைச் சொற்களைத் தேர்க.

அ) நெருப்பு - தருமாறு ஆ) அவித்துவிடாதே - மடித்துவிடாதே இ) உனக்கு - உன்னை ஈ) சக்தி – குறைந்து

12. இயைபுச் சொற்களைத் தேர்ந்தெடுக்க.                                                               

அ) நெருப்பு - நீடித்து ஆ) அதனை - அவித்து இ) பாட்டுகள் - பாடுகிறோம்  ஈ) பாடுகிறோம் - கூறுகிறோம்

4.

"நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு

வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை

நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல,

பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு"

13. பாடல் இடம்பெற்ற நூல்-----

அ) சிலப்பதிகாரம் ஆ) திருவிளையாடற் புராணம்  இ) முல்லைப்பாட்டு ஈ) குறிஞ்சிப்பாட்டு

14. பாடலை இயற்றியவர் -

அ) காரியாசான் ஆ) நல்லந்துவனார்  இ) நக்கீரனார்  ஈ) நப்பூதனார்

15. நேமி- பொருளைத் தேர்ந்தெடுக்க.

அ) முத்து  ஆ) கடல் இ) சங்கு ஈ) சக்கரம்

16. பாடலில் உள்ள மோனைச் சொற்களைத் தேர்க.

அ) நனந்தலை - உலகம்  ஆ) நீர் – நிமிர்ந்த  இ) வலம்புரி - தடக்கை  ஈ) வலம்புரி -பொறித்த

5.

"அன்று அவண் அசைஇ, அல்சேர்ந்து அல்கி,

கன்று எரி ஒள்இணர் கடும்பொடு மலைந்து

சேந்த செயலைச் செப்பம் போகி"

17. அசைஇ -இலக்கணக்குறிப்பைத் தேர்க.

அ) இன்னிசை அளபெடை ஆ) சொல்லிசை அளபெடை  இ) செய்யுளிசைஅளபெடை ஈ) ஒற்றளபெடை

18. அல்கி என்ற சொல்லின் பொருள் -

அ) சுற்றம்  ஆ) இளைப்பாறி  இ) தங்கி  ஈ) பள்ளம்

19. பாடலின் ஆசிரியர்

அ) பெருங்கௌசிகனார்  ஆ) நக்கீரர்  இ) நத்தத்தனார்  ஈ) அதிவீரராமபாண்டியர்

20. பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

அ) காசிக்காண்டம்  ஆ) மலைபடுகடாம்  இ) நற்றிணை  ஈ)குறுந்தொகை

6.

"விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்

கரு வளர் வானத்து இசையில் தோன்றி.

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;

உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்"

21. பாடல் இடம் பெற்ற நூல்

அ) புறநானூறு ஆ) அகநானூறு இ) பரிபாடல் ஈ) பதிற்றுப்பத்து

22. பாடலை இயற்றியவர்-

அ) கீரந்தையார்  ஆ) குலசேகராழ்வார்  இ) அதிவீரராம பாண்டியர்  ஈ) பெருங்கெளசிகனார்

23. பாடலில் இடம்பெற்றுள்ள எதுகை நயத்தைத் தேர்க.

அ) கரு வளர் - உரு அறிவாரா  ஆ) உரு அறிவாரா - உந்து வளி 

) விசும்பில்கருவளர்  . விசும்பில்வானத்து

24. விசும்பு என்ற சொல்லின் பொருள்-

அ) மழை  ஆ) காற்று  இ) வானம்  ) நீர்

7.

"ஓங்கு தண் பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போதேனும்

நீங்குவம் அல்லேம் கண்டாய் ஆயினும் நீயும் வேறு

தீங்கு உளை அல்லை காடன் செய்யுளை இகழ்தலாலே

ஆங்கு அவன் இடத்தில் யாம் வைத்த அருளினால் வந்தேம் என்னா."

25. பாடல் இடம் பெற்ற நூல்-

அ) பெரியபுராணம்  ஆ) திருவிளையாடற்புராணம்  இ) கந்தபுராணம்  ஈ) பரிபாடல்

26. பாடலின் ஆசிரியர்

அ) பரஞ்சோதி முனிவர்  ஆ) கம்பர்   இ) சேக்கிழார்  ஈ) குலசேகராழ்வார்

27. பாடலில் பயின்று வந்துள்ள அடி எதுகைகளைத் தேர்க.

அ) ஓங்கு – பனை  ஆ) நீங்குவம் –அல்லோம்  இ) ஓங்கு -  நீங்குவம்  ஈ) நீத்து - நீயும்

28. நீபவனம் என்ற சொல்லின் பொருளைத் தேர்க.

அ) ஆலவனம்   ஆ) இடும்பவனம்  இ) முல்லை வனம்  ஈ) கடம்பவனம்

8

"வண்மை யில்லையோர் வறுமை யின்மையாற்

றிண்மை யில்லையோர் செறுந ரின்மையால்

உண்மை யில்லைபொய் யுரையி லாமையால்

வெண்மை யில்லைபல் கேள்வி மேவலால்"

29. பாடலின் ஆசிரியர்

அ) வீரமாமுனிவர்  ஆ) தமிழழகனார்  இ) கம்பர்  ஈ) இளங்கோவடிகள்

30. --------மிகுந்திருப்பதால் கோசல நாட்டில் அறியாமை இல்லை

அ) வறுமை  ஆ) கொடை இ) பொய்மொழி   . கேள்வி

31. எதுகையைத் தேர்ந்தெடுக்க.

அ) உண்மை, வெண்மை  ) உண்மை, பொய்யுரை  ) வண்மை, வறுமை ஈ) வெண்மை, கேள்வி

32. வண்மை - பொருளைத் தேர்க.

அ) கொடை ஆ) மெய்மை இ) அறியாமை ஈ) வறுமை

9.

"பகர்வனர் திரிதரு நகர வீதியும்;

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்"

33. மோனைச் சொற்களைத் தேர்க.

அ) பகர்வனர், கட்டு ஆ) வீதியும், நூலினும்  இ) பருத்தி, காருகர்  ஈ) பகர்வனர், பட்டினும்

34. காருகர் என்னும் சொல்லின் பொருள் -

அ) நெய்பவர் ஆ) சிற்பி இ) ஓவியர் ஈ) உமணர்

35. எதுகைச் சொற்களைத் தேர்க.                

அ) பகர்வனர், திரிதரு ஆ) பட்டினும், கட்டு  இ) நூலினும், இருக்கையும் ஈ) திரிதரு, மயிரினும்

36. செய்யுள் இடம்பெற்றுள்ள நூல்

அ. நீதிவெண்பா ஆ. கம்பராமாயணம்  இ. சிலப்பதிகாரம்  ஈ. திருவிளையாடற் புராணம்

10

"உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்;

இல்லா யின்எமர் இல்லம் தட்டுவேன்

வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்

வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்!

பண்டோர் கம்பன், பாரதி, தாசன்

சொல்லா தனசில சொல்லிட முனைவேன்"

37. பாடலின் ஆசிரியர் -

அ) கண்ணதாசன்  ஆ) பாரதிதாசன்  இ) வண்ணதாசன்  ஈ) பாரதியார்

38. கவிஞருக்கு உவமையாகக் கூறப்பட்டதைத் தேர்க.

அ) வண்டு  ஆ) காற்று  இ) அன்னம்  ஈ) மழை

39. பாடலில் இடம் பெற்றுள்ள இயைபுச் சொற்களைத் தேர்க?

அ) தருவேன், தட்டுவேன் ஆ) உண்டா, வண்டா  இ) இல்லா, இல்லம் ஈ) சொல்லா, சொல்லிட

40. பாடல் இடம் பெற்றுள்ள கவிதையின் பெயர்---

அ) ஞானம்  ஆ) காலக்கணிதம்  இ) பூத்தொடுத்தல்  ஈ) சித்தாளு

11.

"பூக்கையைக் குவித்துப் பூவே

     புரிவொடு காக்கென்று அம்பூஞ்

சேக்கையைப் பரப்பி இங்கண்

      திருந்திய அறத்தை யாவும்"

41. பாடலின் ஆசிரியர் -

அ) வீரமாமுனிவர் ஆ) நாகூர் ரூமி இ) அழகிரிசாமி ஈ) அசோகமித்திரன்

42. பாடல் இடம் பெற்றுள்ள நூல்

அ) கம்பராமாயணம்  ஆ) தேம்பாவணி  இ) இரட்சண்ய யாத்திரிகம்  ஈ) சீறாப்புராணம்

43. பாடலில் உள்ள எதுகைச் சொற்களைத் தேர்ந்தெடுக்க.

அ) பூக்கையை, புரிவொடு ஆ) சேக்கையை. திருந்திய  இ) பூக்கையை, சேக்கையை ஈ) சேக்கையை, பரப்பி

44. சேக்கை என்ற சொல்லின் பொருள்

அ) உடல்  ஆ) படுக்கை இ) கிளை ஈ) இளம்பயிர்

 பதிவிறக்க

 

 

 

 

 

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை