10 TH STD TAMIL PODHUKATTURAIKAL

 

10.ஆம் வகுப்பு தமிழ்

                       பொதுக்கட்டுரைகள்

1. குமரிக்கடல் முனையையும், வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ்தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும்.எழில்சேர் கன்னியாய் என்றும்திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ் பேசி,சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம் மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக்கொண்டுசான்றோர் வளர்த்த தமிழ்என்ற தலைப்பில் கட்டுரை வரைக.

தலைப்பு : சான்றோர் வளர்த்த தமிழ்

முன்னுரை:

                 தமிழே! நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்களித்தேனே!"

    என்று கூறும் வண்ணம் பல செந்தமிழ்ப் புலவர்கள் பலவகை இலக்கியங்களை,பல்வேறு வடிவங்களில் படைத்து, தமிழன்னைக்கு அணியாகச் சூட்டியுள்ளனர்.தமிழ் இன்றளவிலும் கன்னித்தமிழாய் திகழ்வதற்கு அதுவும் ஒரு பெருங்காரணமாகும்.சான்றோர்களாலும், புலவர்களாலும் வளர்ந்த விதம் பற்றி இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம்.

பிள்ளைத்தமிழ்:

குழவி மருங்கினும் கிழவதாகும்   - தொல்காப்பியர்

     கடவுளையோ, அரசனையோ அல்லது மக்களில் சிறந்தவர் ஒருவரையோ குழந்தையாக எண்ணி, பத்துப் பருவங்கள் அமையப் பாடல்கள் பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும். பருவத்திற்கு பத்து பாடல்களாக, 100 பாடல்கள் அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழ்.ஒட்டக்கூத்தர் பாடிய இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் காலத்தால் முற்பட்டது.

சதகம்:

    நூறு பாடல்கள் கொண்ட நூலுக்குச் சதகம் என்று பெயர்.மாணிக்கவாசகர் பாடிய திருச்சதகமே முதல் சதக நூலாகும். இது உள்ளத்தை உருக்கும் பக்தி பாக்களால் அமைந்தது. பழமொழிகள், நீதி நெறி முறைகள், இறைவனை போற்றிப் பாடும் கருத்துக்கள் போன்றவை சதகத்தில் சிறப்புகளாகும்.

பரணி:

                     "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி"

       என்று இலக்கண விளக்கப் பாட்டியல் என்ற நூல் பரணிக்கு இலக்கணம் தருகிறது.போர்க்கள வெற்றியைப் புகழ்ந்து பாடுவதே பரணி ஆகும். போரில் தோற்றவர் பெயர் அல்லது அவரது நாட்டின் பெயர் நூலுக்குச் சூட்டப்படும். செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி காலத்தால் முற்பட்டதாகும்.

அந்தாதி:

     அந்தம்+ ஆதி = அந்தாதி. ஒரு பாடலில் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சீர், அடி ஆகியவற்றில் ஒன்று, அடுத்த பாடலில் முதலில் வரும்படி அமைத்து பாடுவது அந்தாதி எனப்படும்.அந்தாதி விருத்தம் என்னும் யாப்பு வடிவில் பாடப்படும். காரைக்கால் அம்மையார் இயற்றிய அற்புதத் திருவந்தாதி முதல் அந்தாதி நூலாகும்.

கோவை:

       பாடலுக்கும், அடுத்த பாடலுக்கும் நிகழ்ச்சி வரிசை அமையும் கதை போல அமைத்து எழுதுவது கோவை.கி.பி எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாண்டிக்கோவை எனும் நூலே முதல் கோவை நூலாகும்.

முடிவுரை:

        "வீறுடை செம்மொழி தமிழ்மொழி" என்ற பெருஞ்சித்திரனாரின் கூற்று முற்றிலும் உண்மையாகும். மேற்கூறியவாறு, பல்வகை இலக்கியங்கள் சான்றோர் பலரால் பாங்காய் வளர்ந்தன. சான்றோர்கள் தமிழை வளர்ப்பதில் தனி ஈடுபாடு கொண்டு செயல்பட்டனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியைக் காப்பது நம் தலையாய கடமையாகும்

2. பள்ளி ஆண்டு விழா மலருக்காக, நீங்கள் நூலகத்தில் படித்த கதை/ கட்டுரை/ சிறுகதை/ கவிதை நூலுக்கு மதிப்புரை எழுதுக குறிப்பு:நூல் தலைப்பு- நூலின் மையப் பொருள்- மொழி நடை-வெளிப்படும் கருத்து-நூல் கட்டமைப்பு- சிறப்புக் கூறு- நூலாசிரியர்.

நூல் தலைப்பு: கனவெல்லாம் கலாம்

      அன்று இந்தியாவை அறியாதவர்கள் கூட காந்தியடிகளை அறிந்திருந்தார்கள், காந்திதேசத்திலிருந்து வருகிறீர்களா? என்பார்கள். இன்று இந்தியாவை அறியாதவர்களும் மாமனிதர் அப்துல்கலாம் அவர்களை அறிந்திருக்கிறார்கள்.இந்தியாவின் அடையாளமாக தமிழர்கள் பெருமையாக அறியப்பட்ட அப்துல் கலாம் அவர்களின் தகவல் களஞ்சியம் தான் இந்த" கனவெல்லாம் கலாம்என்ற நூலாகும். இதுவே இந்நூலின் தலைப்புமாகும்.

நூலின் மையப் பொருள்:

        இந்நூலாசிரியர் மிகவும் உன்னிப்பாக உற்றுநோக்கி மாமனிதர் அப்துல் கலாம் அவர்களைப் பற்றி வந்த தகவல்கள், கட்டுரைகள், கவிதைகள் அனைத்தையும் தொகுத்துள்ளார்.அப்துல் கலாம் பற்றி அறிய வேண்டிய அனைவரும் படிக்க வேண்டிய நூல்" கனவெல்லாம் கலாம்

வெளிப்படும் கருத்து:

     மாமனிதர் அப்துல்கலாம் அவர்களின் வெற்றிக்குக் காரணங்கள் எளிமை, இனிமை, நேர்மை ஆகியவையாகும். அவர் உலகப் பொதுமறையை ஆழ்ந்து படித்ததோடு நின்றுவிடாமல் அதன்படி வாழ்ந்ததால் உலகப்புகழ் பெற்றார் என்பதே உண்மை.

நூல் கட்டமைப்பு:

     நூலாசிரியர் இந்நூலில்,1. காணிக்கை கட்டுரைகள்,2. இரங்கல் செய்திகள், 3.கவிதை மாலை,4. கலாம் அலைவரிசை,5. கலாம் கருவூலம் ஆகிய ஐந்து தலைப்புகளில் நூலை வடிவமைத்துள்ளார். முன்னணி நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் மட்டுமின்றி சிற்றிதழ்கள் வரை களம் பற்றிய தகவல்களை தேடித் தேடித் தொகுத்துள்ளார். முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளது உண்மையே.

சிறப்புக் கூறு:

      பொதுவாக தொகுப்பு நூலை உருவாக்க, தகவல்களைத் தேடித் தேடி தொகுப்பது எளிதான செயலன்று. ஆனால் அவற்றையெல்லாம் வகுத்து முறைப்படுத்துவது அதைவிட அரிய செயலாகும். தகவல் தொகுப்பு இந்நூலின் சிறப்புக் கூறாகக் கருதப்படுகிறது.

நூலாசிரியர்:  தமிழ்த்தேனீ முனைவர். இரா. மோகன்

3. உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

முன்னுரை:

    குடும்பத்தினருடன் வெளியில் செல்வது யாருக்குத் தான் பிடிக்காது? அப்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். அவ்வகையில் கடந்த மாதம் எனது குடும்பத்தினருடன் எங்கள் ஊரான திருத்தணியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். அப்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களை இங்கு கட்டுரையாகத் தந்திருக்கிறேன்.

அறிவிப்பு:

    நுழைவாயிலின் வழியாக நுழைந்த உடன்,அங்கே எந்தெந்த நாட்டுப்புறக் கலைகள் எங்கெங்கே நிகழ்த்தப் படுகின்றன? அந்தந்த அரங்குகளின் திசை உள்ளிட்ட அனைத்தும் ஒலிபெருக்கிமூலம் தெளிவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.

அமைப்பு:

அனைத்து கலைகளும் சங்கமித்தது

                என் மனமும் அங்கேயே நிலையாய் நின்றது

      கலையரங்க நுழைவாயிலில் நிகழ்ந்து கொண்டிருந்த அறிவிப்பைக் கேட்டு விட்டு, அனைவரும் உள்நுழைந்தோம். அங்கே ஓரிடத்தில் அரங்குகளின் அமைப்பு குறித்த வரைபடம் தெளிவாக வரையப்பட்டிருந்தது. எங்கள் ஊரான திருத்தணியின் எழில்மிகு தோற்றமும் அங்கே காட்சிப்படுத்தப் பட்டிருந்தது.

சிறு அங்காடிகள்:

     கலைத்திருவிழா நிகழிடத்தில் விளையாட்டுப் பொருள்கள், தின்பண்டங்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், உணவுப்பொருட்கள் மற்றும் பலவகையான பொருட்களை விற்கும் சிறுசிறு அங்காடிகளும் அமைக்கப்பட்டிருந்தது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவரும் விதமாக இருந்தது.

நிகழ்த்தப்பட்ட கலைகள்:

மனதைக் கவரும் மயிலாட்டம்

                நம்மையும் ஆடத்தூண்டும் கரகாட்டம்

      எங்கள் ஊரில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் பெரும்பாலும் எல்லா நிகழ்கலைகளும் நிகழ்த்தப்பெற்றன. அங்கே மயில் ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம்,தெருக்கூத்து உள்ளிட்ட பலவகை ஆட்டங்கள் அங்கு வந்த மக்களை மகிழ்விக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டன. எங்களுக்கு அது புதுவித அனுபவமாக இருந்தது.

பேச்சரங்கம்:

    கலையரங்கத்தில், முத்தமிழும் ஒன்று கூடியதுபோல் இருந்தது கலைத்திருவிழாவில் பேச்சரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தொலைக்காட்சிகளில் பேசக்கூடிய புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கேற்று பேசிக்கொண்டிருந்தனர். கலைத்திருவிழாவிற்கு வந்த மக்களில் பலர் மெய்மறந்து பேச்சாளர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு நின்றனர். நானும் என் குடும்பத்தினரும் கூட பேச்சரங்கத்தில் அமர்ந்து பேச்சைக் கேட்டு விட்டு வந்தோம்.

முடிவுரை:

ஆவலுடன் அங்கு சென்றோம்

                  அங்கிருந்து  வர மனமில்லாமல் வந்தோம்

         இறுதியாக எனக்குத் தேவையான சில பொருட்களை அங்கிருந்த அங்காடிகளில் வாங்கிக் கொண்டு, வெளியில் வர முயற்சித்தோம்.கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்ததால், வெளியில் வருவதற்கு நீண்ட நேரம் ஆனது. ஒருவழியாக வெளியில் வந்து, மகிழுந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றோம். எனது வாழ்வில் மறக்கமுடியாத மிகச்சிறந்த அனுபவமாக இந்நிகழ்வு அமைந்தது.

4. உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.                                                 

முன்னுரை : 

            எங்கள் ஊரில், அரசுப் பொருட்காட்சி, மஞ்சக்குப்பம் திடலில் சிறப்பாக நடைபெற்றது. நுழைவாயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பிரமாண்டமாக இருந்தது. அங்கே நாங்கள்  கண்டு மகிழ்ந்த நிகழ்வுகள் குறித்து இக்கட்டுரை மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நுழைவுச்சீட்டு : 

             பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பத்து வயதிற்குட்பட்டவர்களுக்கு ரூ.30-ம் பத்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.50-ம் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. நாங்கள் நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு உள்ளே சென்றோம்.

பல்துறைக் கண்காட்சி அரங்கங்கள் :  

v  வனத்துறை அரங்கத்தின் உள்ளே சென்று பார்த்தபோது வனத்தையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பது எப்படி என்பதை அறிந்து கொண்டேன்.

v  கல்வித்துறை அரங்கத்தின் உள்ளே கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் கல்வியின் சிறப்பு குறித்து பல்வேறு செய்திகள் அச்சிடப்பட்டு ஒட்டி வைக்கப்பட்டிருந்தது.

v  போக்குவரத்துத் துறையினர் சாலை விதிகளைக் கடைபிடிப்பதால் சாலை விபத்துக்களைத் தவிர்க்கலாம் என்ற விழிப்புணர்ச்சி கருத்துகளைத் தெரிவித்தன. மேலும் சில போக்குவரத்துக் குறியீடுகளுக்கான விளக்கங்களும் அளிக்கப்பட்டன.

v  காவல்துறை, பொதுப்பணித் துறை, மீன் வளத்துறை, வேளாண்துறை போன்று பல்வேறு துறை சார்ந்த அரங்கங்களின் உள்ளே சென்று அரிய பல தகவல்களை அறிந்து கொண்டேன்.

அங்காடிகள் : 

      வீட்டு உபயோகப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் எனப் பல்வேறு பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கிக் கொள்ளும் அளவுக்கு பல்வேறு அங்காடிகள் இருந்தன. தேவையான சில பொருட்களை மட்டும் நான் வாங்கிக் கொண்டேன். உணவு அங்காடிக்குச் சென்று டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி, பனிக்கூழ் முதலியவற்றை வாங்கி உண்டேன்.

இராட்டினம் :

         மயக்கம் தந்தாலும் மனதை மயக்கும் இராட்டினங்களைச் சுழலும் முறையை வியப்புடன் பார்த்தேன். இராட்சச இராட்டினம், குவளை இராட்டினம், டிராகன் இராட்டினம் எனப் பல்வேறு இராட்டினங்களைக் கண்டு மகிழ்ந்தேன்.

பிற பொழுதுபோக்கு அம்சங்கள் : 

    பேய்வீடு, பாதாளக் கிணறு, முப்பரிமாண திரையரங்கம், மீன்காட்சி சாலை, பனிவீடு எனப் பல்வேறு அரங்கங்கள் இருந்தன. இப்பொழுதுபோக்கு அரங்கங்களுக்குத் தனித்தனியே கட்டணம் வசூலிக்கப்பட்டது.

பாரம்பரிய கலைகள் : 

          நமது பாரம்பரிய கலைகளான கரகாட்டம், மயிலாட்டம். ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம் ஆகிய கலைகளும் அங்கு நிகழ்த்தப்பட்டன. காண்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
முடிவுரை :  

        பல மணி நேரமாக சுற்றிப்பார்த்த களைப்பு ஒருபுறம் இருந்தாலும், அங்கே சுற்றிப் பார்த்து பல செய்திகளைத் தெரிந்து கொண்ட மனமகிழ்ச்சியுடன் வீடு திரும்பினோம்.

5. குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பு தருக: முன்னுரை- சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு- சாலை விதிகள்- ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்- விபத்துகளை தவிர்ப்போம், விழிப்புணர்வு தருவோம்- முடிவுரை.

                                                              தலைப்பு : சாலை பாதுகாப்பு

முன்னுரை:                                      

      சாலை விபத்துக்கள் நமது சமுதாயத்திற்கும், காவல்துறைக்கும், சட்டத்துக்கும் ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. தினந்தோறும் சாலைவிபத்துகளைப் பற்றிய செய்திகளை நாம் மிகுதியாக அறிகிறோம். இக்காலகட்டத்தில் மிகுதியான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம் மதிக்காமல் நடப்பது இதற்கெல்லாம் காரணம் ஆகும். சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு:

       சாலையில் விபத்துகள் நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையினர் பணி செய்கின்றனர்.அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு வரையறுத்துள்ளது. அறிவிப்புப் பலகைகள் மூலமாகவும், விளம்பரங்கள் மூலமாகவும், ஓட்டுனர் பயிற்சி பெறும்போதும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்படுகிறது.சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

சாலை விதிகள்:

      சாலையில் பயணம் செய்வோர் அனைவரும் அடிப்படையான சாலை விதிகள் அனைத்தையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.நடைமேடையைப் பயன்படுத்துதல், நகரப்பகுதிகளில் சாலையைக் கடக்க சுரங்க நடைபாதைகள் பயன்படுத்துதல், வெள்ளைக் கோடுகள் போடப்பட்ட இடத்தில் சாலையைக் கடத்தல், வாகன ஓட்டிகள் முறையான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட அடிப்படை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்:

v  சிவப்பு வண்ண விளக்கு" நில்" என்ற கட்டளையையும், மஞ்சள் வண்ண விளக்கு, தயாராக இரு என்ற கட்டளையையும், பச்சை வண்ண விளக்கு"புறப்படு" என்ற கட்டளையையும் நமக்குத் தருகிறது. அதைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.

v  போக்குவரத்துக் காவல் துறையினரின் கட்டளையை மீறி நான் செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம் இருக்கக்கூடாது.

v  சாலையில் அந்தந்த வாகனங்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது. நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்த முயற்சி செய்யக்கூடாது. இருசக்கர வாகனங்களில் இருவருக்குமேல் பயணிக்கக் கூடாது.

v  வாகனஓட்டிகள் உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது கண்டிப்பாக வாகனம் ஓட்டக்கூடாது.மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல் சட்டப்படி குற்றமாகும்.பள்ளிகள், மருத்துவமனை, முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு அருகில் அதிகமான ஒலி அளவில் ஒலிப்பானை ஒலிக்கக் கூடாது.

முடிவுரை:

     "சாலைவிதிகளை மதிப்போம்          

      விலைமதிப்பில்லாத உயிர்களைக் காப்போம்"

     என்பதை அனைவரும் மனதிற்கொண்டு சாலை விதிகளை கடைபிடித்து, சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்வோம்.

6. கல்விக்கண் திறந்தவர்களுக்கு இடையில் கைவிடப்பட்ட பெண்களுக்காக உழைத்த முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி பற்றி கட்டுரை வரைக.

மருத்துவர் முத்துலட்சுமி

முன்னுரை:

இந்திய மகளிர் விடுதலை இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் டாக்டர் முத்துலட்சுமி.. மருத்துவப் பயிலும் முதல் இந்தியப் பெண் எனும் பெருமையை பெற்றார். சமூக முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.

பிறப்பு மற்றும் கல்வி

முத்துலட்சுமி ரெட்டி 1886 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார். அப்போது பெண்கள் கல்வி பெறுவதும் மருத்துவம் போன்ற கஷ்டமான துறையில் நுழைவதும் கடினமாக இருந்தாலும், தனது ஊக்கத்தால் மருத்துவக் கல்வியை முடித்தார்.

சமூக பணிகள்

முத்துலட்சுமி ரெட்டி, கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள், தொழிலிழந்த பெண்கள் போன்றோருக்காக பல திட்டங்களை உருவாக்கினார். அவைகள் என்ற அமைப்பை நிறுவி, பெண்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை அளிக்க முயன்றார். சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய இவர், குழந்தைகள் திருமணத்துக்கு எதிரான சட்டங்களை முன்வைத்து, குழந்தை திருமண தடுப்புச் சட்டம் உருவாக்கப் பெரிதும் துணை புரிந்தார்.

முக்கிய சாதனைகள்:

·        இந்தியாவின் முதல் பெண் மருத்துவ அதிகாரி.

·        தமிழகத்தின் முதல் மகளிர் சட்டமன்ற உறுப்பினர்.

·        சென்னை அரசுச் சுகாதாரத் துறையில் பணியாற்றிய முதல் பெண்.

·        பெண்கள் கல்விக்காகவும், மருத்துவ வசதிக்காகவும் போராடிய சமூக சீர்திருத்தவாதி.

மறைவும் நினைவுகளும்

1968-ஆம் ஆண்டு முத்துலட்சுமி இவ்வுலகை விட்டு மறைந்தாலும், அவர் செய்த சாதனைகள் இன்று வரை தமிழ் மக்களின் மனதில் நிலைத்திருக்கின்றன. அவரின் தொண்டுகள் இன்று பெண்கள் முன்னேற்றத்தின் அடித்தளமாக விளங்குகின்றன.

முடிவுரை

இந்தியாவின் சமூக மாற்றங்களில் முக்கிய பங்கு வகித்த டாக்டர் முத்துலட்சுமி, கல்விக்கண் திறந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், எல்லா தரப்பிலும் உள்ள பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாக என்றும் நினைவில் இருக்கிறார்.

7. உங்கள் ஊரில் கடின உழைப்பாளர்- சிறப்பு மிக்கவர் - போற்றத்தக்கவர் என்ற நிலைகளில் நீங்கள் கருதுகின்ற பெண்கள் தொடர்பான செய்திகளை தொகுத்து எழுதுக.

குறிப்பு : பூவிற்பவர் , சாலையோர உணவகம் நடத்துபவர்

சாதனைப்பெண்கள்

முன்னுரை

எங்கள் ஊரில் பல்வேறு வகையான தொழில்களில் கடின உழைப்புடன் ஈடுபட்டு வாழ்வை முன்னெடுத்துச் செல்கிற பெண்கள் பலர் உள்ளனர். அவர்கள் மட்டும் இல்லாமல், குடும்பத்தையும் சமூகத்தையும் முன்னேற்றுகிறார்கள். இங்கு அவர்களில் சிலரைப் பற்றி பார்க்கலாம்.

பூ விற்கும் சின்னம்மாள்

சின்னம்மாள் அம்மா, இருபது வருடங்களாக விடியலிலிருந்து வீதிகளில் பூவிற்று வருகின்றார். சாயங்காலம் வரை பூக்கூடை தலையில் வைத்துக்கொண்டு வீதியெல்லாம் நடந்து, வீடு வீடாகச் சென்று பூவிற்று வருகிறார். இவரது கடின உழைப்பு, நேர்த்தியான பணியாற்றும் தன்மை, நம்மை விழிக்க வைக்கும் ஒரு சிறப்பு உதாரணமாகத் திகழ்கிறது. இரண்டு மகள்களை கல்வியாளர்களாக மாற்றியிருக்கிறார் என்ற பெருமை அவருக்கிருக்கிறது.

சாலையோர உணவகம் நடத்தும் காளியம்மாள்

காளியம்மாள் தனது கணவரை இழந்த பின்னும் தளராமல், தனது மூன்று பிள்ளைகளை வளர்க்கச் சாலையோரத்தில் சிறிய உணவகம் நடத்தத் தொடங்கினார். இப்போது அவர் உணவகம் பகல் முழுவதும் வியாபாரம் செய்யும் அளவுக்கு பரவலாகப் பெயர் பெற்றுள்ளது. சைவ உணவுகளின் சுவையும் சுத்தமும் மக்களிடையே நல்ல மதிப்பை பெற்றுள்ளது. அவரின் உழைப்பும் மன உறுதியும், தன்னம்பிக்கையும், ஊக்கமளிக்கக் கூடியவை.

முடிவுரை:

சின்னம்மாள் மற்றும் காளியம்மாள் போன்ற பெண்கள் தான் சமூகத்தின் அடித்தளத்தை நிலைத்துவைக்கும் தூண்கள். இவர்கள் போன்றவர்களை நாம் மட்டும் அல்ல, ஒவ்வொருவரும் போற்ற வேண்டியது அவசியம். அவர்களின் வாழ்க்கைப் பயணம் மற்ற பெண்களுக்கு வழிகாட்டியாக அமையும்.

பதிவிறக்கம் செய்ய

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை