8.ஆம் வகுப்பு தமிழ் கட்டுரை, கடிதங்கள்

 

8.ஆம் வகுப்பு தமிழ் - கட்டுரை , கடிதங்கள்

இயல்-1

1. கட்டுரை எழுதுக:

                                                                   எனது தாய்மொழி தமிழ்

முன்னுரை: 

எனது தாய்மொழி தமிழ். இந்த வார்த்தைகளை கூறும் போதே என் மனதிற்கு ஒரு பெருமிதம், ஒரு உணர்ச்சி மேலோங்கி வருகிறது. தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல, அது ஒரு பண்பாட்டின் துடிப்பும், ஒரு இனம் பேசும் உயிரும் ஆகும்.

தமிழ் மொழியின் பாரம்பரியம்:

தமிழ் மொழி உலகிலேயே மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகும். இது சங்க காலத்திலிருந்தே வளர்ந்து வந்தது. தமிழ் இலக்கியங்கள், பாடல்கள், பழமொழிகள், பழைய வரலாற்று ஆவணங்கள் அனைத்தும் இந்த மொழியின் மகத்துவத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்கள் உலகளாவிய புகழ் பெற்றவை.

என் தாய்மொழியின் தனிச்சிறப்புகள்:

தமிழ் ஒரு இனிமையான மொழி. இதில் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இசை போல ஒரு அழகு உள்ளது. தமிழ் வார்த்தைகள் இயற்கையைப்போல இனிமையாகும். எளிமையாகவும், ஆழமான கருத்துக்களை சொல்லக்கூடிய திறன் தமிழுக்கு உண்டு.

தாய்மொழியின் முக்கியத்துவம்:

ஒரு மனிதன் பிறக்கும் போது முதல் கேட்கும் மொழி தான் தாய்மொழி. அதனால் அது அவனுடைய உணர்வுகளோடும், எண்ணங்களோடும் பிணைந்திருக்கும். தாய்மொழி மனிதனை அடையாளம் காணும் முக்கிய அடையாளமாகும். எனவே தாய்மொழியை பேணிக் காக்க வேண்டும்.

முடிவுரை:                                               

நாம் மற்ற மொழிகளை கற்கலாம், பேசலாம். ஆனால் நமது தாய்மொழி தமிழ் மீது நம்பிக்கையும், அன்பும் இருக்க வேண்டும். தமிழை நாமே முதலில் மதிக்க வேண்டும், பிறர் மதிப்பார்கள். என் தாய்மொழி தமிழ் எனும் சொல்லில் என்னுள் ஒரு பசுமை உணர்வு பிறக்கிறது. நான் தமிழைப் பெருமையாகக் கொண்டாடுகிறேன்!

இயல்-2

2. விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்றஉங்கள் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.

7, தெற்கு வீதி,

மதுரை-1

11-03-2022.

 

ஆருயிர் நண்பா,

        நலம் நலமறிய ஆவல். உன்னைச்சந்தித்து நீண்ட நாட்களாகி விட்டன.எனினும்,உன்னுடன் பழகிய நாட்கள் எனக்கு எப்போது நினைத்தாலும் இன்பம் தருவன.மாநில அளவில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் நீ முதல் பரிசு பெற்றுள்ள செய்தியைத் தொலைக்காட்சி வாயிலாக அறிந்தேன்.விளையாட்டில் நீ பெரிய அளவில் சாதிப்பாய் என்பது, ”விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்பநாம் தொடக்க கல்வி பயிலும்போதே தெரிந்தது.நீ இதே போன்று பல வெற்றிகளைப்பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இப்படிக்கு,

உனது ஆருயிர் நண்பன்

.தளிர்மதியன்.

உறைமேல் முகவரி:

     த.கோவேந்தன்,

     12,பூங்கா வீதி,

     சேலம்-4

இயல்-3

3. கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக:

நூலகம்

முன்னுரை–  நூலகத்தின் தேவை- வகைகள்- நூலகத்தில் உள்ளவை- படிக்கும் முறை- முடிவுரை

முன்னுரை:

        “நூலகம் அறிவின் ஊற்று

        ”வீட்டிற்கு ஒரு நூலகம் அமைப்போம்

என்று கூறுகிறார் பேரறிஞர் அண்ணா. இக்கட்டுரையில் நூலகத்தின் தேவை குறித்தும், அதன் வகைகள் குறித்தும், அதை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்பது குறித்தும் நாம் காண இருக்கிறோம்.

நூலகத்தின் தேவை:

       “ சாதாரண மாணவர்களையும் 

         சாதனை மாணவர்களாக மாற்றுவது நூலகம்” 

    ஏழை மாணவர்களும், இளைஞர்களும் படிப்பதற்கு தேவையான நூல்களை விலை கொடுத்து வாங்க முடிவதில்லை. சில நூல்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. அன்றாட செய்தித்தாள்களைக் கூட அவர்களால் வாங்க இயலாத நிலை உள்ளது. ஆகவே, இலவசமாக நூல்களைப் படிக்க நூலகம் தேவைப்படுகின்றது .

நூலகத்தின் வகைகள்:

      மாவட்ட மைய நூலகம், மாவட்ட கிளை நூலகம், ஊரக நூலகம், தனியார் நூலகம், கல்லூரி நூலகம்,பள்ளி நூலகம், பல்கலைக்கழக நூலகம், நடமாடும் நூலகம், மின்நூலகம் என நூலகம் பலவகைப்படும்.

நூலகத்தில் உள்ளவை:

     மொழி சார்ந்த நூல்கள், அறிவியல், வணிகம், நிர்வாகம், கதைகள், சட்டம் போன்ற எண்ணற்ற பிரிவுகளின் அடிப்படையில் நூல்களானது நூலகத்தில் இடம் பெற்றிருக்கும்.

 படிக்கும் முறை:

     நூலகத்தில் நூல்களை எடுத்து அமைதியாக படிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமர்ந்து படிக்க வேண்டும் நூல்களைக் குறிக்கும் சேதப்படுத்துவது படித்த முடித்தவுடன் மீண்டும் உரிய இடத்தில் நூலை வைக்க வேண்டும்.

முடிவுரை:

             “என்னை தலைகுனிந்து படித்தால்,

              உன்னை நான் தலை நிமிரச் செய்வேன்

     என்று புத்தகம் மனிதர்களைப் பார்த்துக் கூறுவதாக புகழ் பெற்ற தொடர் உண்டு. அறிவியலும் தொழில்நுட்பமும் ஆயிரம் வளர்ச்சி ஏற்றினார்கள் நூலகமே என்றும் நிலையானது. அதன் மூலமே மனிதன் ஆழ்ந்த அறிவைப் பெறமுடியும் என்பதை நாம் உணர வேண்டும்.

இயல்-4

4. இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம் எழுதுக.

அனுப்புநர்

     சே.வெண்மதி,

     /பெ  சேரன்,

     562 திருவள்ளுவர் தெரு,

     வளர்புரம் அஞ்சல்,

     அரக்கோணம் வட்டம்,

     இராணிப்பேட்டை மாவட்டம்-631003.

பெறுநர்               

      உயர்திரு.வட்டாட்சியர் அவர்கள்,

      வட்டாட்சியர் அலுவலகம்,

      அரக்கோணம்,

      இராணிப்பேட்டை மாவட்டம்-631003.

ஐயா,

     பொருள்: இருப்பிடச்சான்று வழங்கக் கோருதல் சார்பு.

        வணக்கம் . நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.எனது மேற்படிப்புச் சேர்க்கைக்காக இருப்பிடச்சான்று தேவைப்படுகிறது.நான் அவ்விடத்தில் வசிப்பதற்கான சான்றுகளாக குடும்ப அட்டை நகலையும், ஆதார் அட்டை நகலையும் இணைத்துள்ளேன்.எனவே எனக்கான இருப்பிடச்சான்று வழங்க விரைந்து  நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

                                                                                                                                                 இப்படிக்கு,

தங்கள் பணிவுடைய,                                                                                                                                               சே.வெண்மதி.

இடம்: அரக்கோணம்,

நாள்: 12-03-2022.

 

உறைமேல் முகவரி:

      உயர்திரு.வட்டாட்சியர் அவர்கள்,

      வட்டாட்சியர் அலுவலகம்,

      அரக்கோணம்,

      இராணிப்பேட்டை மாவட்டம்-631003.

இயல்-5

5. கட்டுரை: உழவே உயர்வு

முன்னுரை:

உழவுத் தொழில் என்பது உலகில் உள்ள தொன்மையான தொழில்களில் ஒன்று. "வளமுடைய நாடு எனில் விவசாயம் செழிக்கும் நாடு" என்பது பழமொழி. உணவு இல்லாமல் மனிதன் வாழ முடியாது. அந்த உணவை அளிக்கும் உன்னதமான தொழில் உழவுத் தொழிலாகும்.

உழவின் முக்கியத்துவம்:

மனித வாழ்க்கைக்கு அடிப்படை தேவையான உணவு, காய்கறி, தானியம், பழம் ஆகிய அனைத்தும் உழவின் வாயிலாகவே கிடைக்கின்றன. ஒரு நாடு உணவுப் பாதுகாப்பை பெற வேண்டுமானால், உழவுத்தொழிலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அதனால்தான் உழவர் "உணவுத் தந்தை" எனப் புகழப்படுகிறார்.

இயற்கையுடன் இணைந்த தொழில்:

உழவுத் தொழில் இயற்கையை சார்ந்தது. இது மழை, மண், வெப்பநிலை ஆகியவற்றுடன் நேரடியாக தொடர்புடையதாகும். அதனால், உழவர் பசுமை சூழலைக் காப்பாற்றவும், சுற்றுச்சூழலின் சமநிலையை பராமரிக்கவும் பெரும் பங்கு வகிக்கிறார்.

புதிய மாற்றங்கள்:

இன்றைய காலகட்டத்தில் பல நவீன கருவிகள், இயந்திரங்கள், தொழில்நுட்பங்கள் உழவுத் தொழிலில் பயன்படுத்தப்பட்டு, உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

முடிவுரை:                                                                               

உழவுத் தொழில் இல்லாமல் வாழ்க்கையே இல்லை. இது நம் நாட்டின் முதன்மைத் தொழிலாக இருந்துவந்துள்ளது. உழவுத் தொழிலின் சிறப்பை மாணவர்கள் புரிந்து கொண்டு, அந்நெறியில் பங்களிக்கத் தயாராக வேண்டும். நம் உழவர்களின் பணி எப்போதும் பாராட்டுக்குரியது.

இயல்-6

6. கட்டுரை எழுதுக.

நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு.

முன்னுரை:

   நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்குஇனிவரும் காலம் இளைஞர்கள் காலம். எனவேநான் இளைஞர்கள் நம் நாட்டின் வளர்ச்சிக்காகத் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர்.

இளைஞர்களின் சிறப்புகள்:

   இன்றைய இளைஞர்கள் திறமையிலும் அறிவிலும் சிறப்பு வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். எனவே தான் அன்று விவேகானந்தர் என்னிடம் நூறு இளைஞர்களைக் கொடுங்கள். இந்த நாட்டையே மாற்றிக் காட்டுகிறேன் என்றார் டாக்டர் அப்துல் கலாம் அவர்களும் நம் நாட்டு இளைஞர்களின் கையில்தான் நம் நாட்டின் எதிர்காலம் உள்ளது என்று கூறினார்.

நாட்டு வளர்ச்சி:

    ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கல்வி, பொருளாதாரம், தொழில்துறை முன்னேற்றம் ஆகியவற்றைச் சார்ந்து அமைகிறது. ஒரு நாட்டினுடைய வளர்ச்சி என்பது அந்த நாட்டு இளைஞர்களின் வளர்ச்சி என்றே கூறலாம்.

இளைஞர்களின் பங்கு:

           நன்கு கல்வி கற்ற இளைஞர்களால் தான் ஒருநாடு வளர்ச்சியில் மேலோங்கும். அத்தகைய வகையில் நன்கு கல்விகற்று இளைஞர்கள் பலர் நம் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டுள்ளனர். எண்ணற்ற தொழில்துறைகளில் நம் இளைஞர்கள் சிறந்து விளங்கி வருகின்றனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் நம் நாட்டின் இளைஞர்கள் எண்ணற்ற புரட்சியினை ஏற்படுத்தி வருகின்றனர்.

முடிவுரை:

    "ஒரு நாட்டின் முதுசெலும்பு அந்த நாட்டு இளைஞர்கள்" என்றார் மகாத்னா காந்தி, அது முற்றிலும் உண்பையே! நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக செயல்பட்டு வருபவர்கள் இளைஞர்களே! என்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

இயல்-7

7. புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

12,தென்றல் நகர்,

திருத்தணி-1.

12-03-2022.

அன்புள்ள அண்ணனுக்கு,

       தங்கள் அன்பு தம்பி தமிழ்வேந்தன் எழுதும் மடல்.நலம், நலமறிய ஆவல்.தங்களைச் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகியிருப்பினும்,தங்களை அவ்வப்போது நினைவு கூர்வதுண்டு.எனது தமிழ் தேடலுக்காகச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி ஒன்று தேவைப்படுகிறது.எங்கள் ஊரில் அது கிடைக்கவில்லை. தாங்கள் வசிக்கும் திருவல்லிக்கேணி வள்ளுவர் பதிப்பகத்தில் கிடைப்பதாக அறிந்தேன்.ஒரு பிரதியை வாங்கி தூதஞ்சல் மூலம் அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

                                                                                                                                                 இப்படிக்கு,

தங்கள் அன்பு தம்பி,

கா.கொற்றவன்.

உறைமேல் முகவரி:

    பூ.சொற்கோ

    54,மறவன் வீதி,

    திருவல்லிக்கேணி,

    சென்னை-14

இயல்-8

8. கட்டுரை எழுதுக. : உழைப்பேஉயர்வு.

முன்னுரை:

          ஒருவரை வாழ்வில் உயர்த்துவது அவரது உழைப்பு தான். உழைப்பு தன்னையும் தன் நாட்டையும் உயர்த்தும். உழைப்பின் சிறப்பினைக் காண்போம்.

உழைப்பின் பயன்:

    நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்தால் மட்டுமே வாழ்வில் முன்னேற முடியும். இறைவனால் முடியாத காரியம் கூட உழைப்பாலும் முயற்சியாலும் செய்ய முடியும் என்கிறது திருக்குறள். உழைப்பால் உடலும் உள்ளமும் வலுப்பெறுகிறது.

உழைப்பின் சிறப்பு:

           உழைப்பே உயர்வு தரும் என்பது பழமொழி. உழைப்பால் வரும் பொருளே என்றும் நிலைத்து நிற்கும். விலங்குகளும் பறவைகளும் தமக்குத் தேவையான உணவைத் தாமே உழைத்து தேடிப் பெற்றுக் கொள்கின்றன. உழைப்பில்லாமல் வரும் செல்வத்தை விட்டுவிட்டு உண்மையான உழைப்பால் வரும் செல்வத்தை நாம் அனுபவிக்க வேண்டும்

உழைப்பால் உயர்ந்தவர்கள்:

          தாமஸ் ஆல்வா எடிசன், ஐன்ஸ்டின், ஜி.டி. நாயுடு, டாக்டர் அப்துல் கலாம் ஆகிய எண்ணற்ற அறிஞர்கள் தம்முடைய கடின உழைப்பால் வாழ்வில் முன்னேறி இருக்கிறார்கள் என்பதை அவர்களின் வாழ்க்கை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

முடிவுரை:

     உழைப்பின் உயர்வினை உணர்ந்து, நாம் அனைவரும் நல்வழியில் கடின உழைப்பு செய்து வாழ்வில் முன்னேற வேண்டும்.

 



Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை